பிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்துவதற்காபிஎஸ்4 இன்ஜின் பரிசோதனை வெற்றி: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பணகுடி: இஸ்ரோ மையத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பிஎஸ்4 இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி விண்வெளியில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஸ் இன்ஜின் மற்றும் பிஎஸ்4 இன்ஜின் ரக உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அதிநவீன சேர்க்கை உற்பத்தி திறன் கொண்ட 3டி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிஎஸ்4 இன்ஜின் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த இன்ஜின் பரிசோதனை, இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது. 665 விநாடிகள் வரை விஞ்ஞானிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ராக்கெட்டை விண்வெளியில் செலுத்துவதற்கான உந்து விசைத்திறன் கவுண்ட் டவுன் துவங்கியது. இந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பிஎஸ்4 இன்ஜின் வழக்கமான இன்ஜினை விட குறைவான எடையுடன் காணப்படுவதால் 97 சதவீதம் மூலப்பொருட்கள் சேமிக்கப்பட்டு உற்பத்தி நேரம் 60 சதவீதம் குறைவதாக விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

The post பிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்துவதற்காபிஎஸ்4 இன்ஜின் பரிசோதனை வெற்றி: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: