வேலூர் பாலாற்றங்கரை மயானத்தில் ஆதரவற்ற 3 பேர் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்

வேலூர், மார்ச் 23: வேலூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 3 பேரின் உடல்களை பெற்று திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் அடக்கம் செய்தார். திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன்(37). சமூக சேவகரான இவர், கடந்த 22 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சாலையோரம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கும், கைவிடப்பட்ட முதியோர்களுக்கும் ஆதரவளித்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். மேலும் உறவினர்களால் கைவிடப்பட்டு இறந்தவர்களின் உடல்களை, சட்டப்படி காவல்துறை அனுமதி பெற்று தனது சொந்த செலவில் முறைப்படி நல்லடக்கம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக யாராலும் உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண், 2 ஆண்கள் என 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக, காவல்துறையின் முறையான அனுமதியை பெற்றார். தொடர்ந்து 3 ேபரின் உடல்களை, வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு எடுத்து வந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். இப்பணியில் அவருடன் ராமன் என்பவர் உதவினார். இதுவரை ஆதரவற்ற 2 ஆயிரத்து 321 பேரின் உடல்களை சமூக சேவகர் மணிமாறன் அடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேலூர் பாலாற்றங்கரை மயானத்தில் ஆதரவற்ற 3 பேர் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர் appeared first on Dinakaran.

Related Stories: