வி.கே.புரம் அருகே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனச்சரகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

வி.கே.புரம், மார்ச் 23: வி.கே.புரம் அருகே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் வனச்சரகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சுழற்சி முறையில் இரவு நேர ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், மிளா, காட்டுபன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு அனவன் குடியிருப்பு பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து நெற்பயிர்களையும், கரும்பு பயிரையும் சேதப்படுத்தியது.

கடந்த 13ம் தேதி நள்ளிரவில் யானைகள் கூட்டம் குட்டியுடன் அனவன் குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் வந்தது. அப்போது யானைகள் அனவன் குடியிருப்பு ஊருக்குள் புகுவதற்கு முயற்சித்தது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி யானைகளை விரட்டுவதற்காக அனவன்குடியிருப்பு பகுதிக்குள் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு கரடிகள் ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதையடுத்து கோரையார் பீட்டில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறை அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக அனவன் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளனர். வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தாலோ, தகவல் கிடைத்தாலோ உடனடியாக அங்கு சென்று வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post வி.கே.புரம் அருகே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனச்சரகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: