வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

வத்திராயிருப்பு, மார்ச் 21: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, உயர்கல்வியில் சேரும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி வத்திராயிருப்பு நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், கோலாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் முருகேசன், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியை நளினா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

The post வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: