சிறுவளூரில் மாணவர் சேர்க்கை பேரணி அரசு பள்ளியில் படித்தவர்கள் சாதனைகள் படைக்கின்றனர்: கல்லூரி பேராசிரியர் பெருமிதம்

 

அரியலூர், மார்ச்15: பெரிய சாதனைகளை படைத்தவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவர்களே என்று அரசு பள்ளியில் நடந்த விழாவில் கல்லூரி பேராசிரியர் பேசினார். அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.

பள்ளி வாளகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் முருகேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமை மிக்கவர்கள். அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி படிக்குமே போதே மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது . மருத்துவம் பயில 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு குழந்தைகளை பொதுமக்கள் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். பெரிய சாதனைகளை படைத்தவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவர்களே. அரசுப் பள்ளியில், கட்டமைப்பு, சுகாதாரம் வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. இந்த வாய்ப்பை பெற்றோர்கள் தவறு விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சிறுவளூர், பள்ளகிருஷ்ணாபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. சில்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ், ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி,தனலட்சுமி, செந்தில்குமரன், கோகிலா, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சிறுவளூரில் மாணவர் சேர்க்கை பேரணி அரசு பள்ளியில் படித்தவர்கள் சாதனைகள் படைக்கின்றனர்: கல்லூரி பேராசிரியர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: