பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தல்

சென்னை: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளது.

“சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து, குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி லாபகரமான பரிசுகள் என்ற வாக்குறுதியுடன் பயனர்களைத் தவறாக வழிநடத்துவதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது? இந்த மோசடியின் செயல் முறையானது, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் போர்வையின் கீழ் கணிசமான தொகையை,( 5000 ரூபாய்) பெறுவதற்கான உறுதிமொழி மற்றும் பிரதமரின் புகைப்படத்துடன் பயனர்களை கவர்ந்திழுக்கிறது. விளம்பரத்தைக் கிளிக் செய்தவுடன், ஸ்கிராட்ச் கார்டைக் கொண்ட ஒரு மோசடி இணையதளம் தோன்றும்.

அது கீறப்பட்டால், ஒரு தொகையைக் காண்பிக்கும். பாதிகப்பட்டவர் அதைத் தொடும்போது, அவர்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ள UPI செயலிகளுக்கு (Gpay, Phonepe, PayTM, முதலியன) திருப்பிவிடப்படுவார்கள், அது அந்தத் தொகையைப் பெற UPI பின் நம்பரை உள்ளிடும்படி அவர்களைத் தூண்டுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள், தொகையைப் பெற UPI பின் நம்பரை உள்ளிடத் தேவையில்லை என்ற அறிவு இல்லாததால், அவசர அவசரமாக, UPI பின்னை உள்ளிட்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும்.

இதுபோன்ற திட்டங்களை எதிர்கொள்ளும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற மோசடி செயல்களுக்கு பலியாகாமல் இருக்க, தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் காவல்துறை இயக்குநரால் வெளியிடப்பட்ட சில அத்தியாவசிய குறிப்புகள் இங்கே:

1. எந்தவொரு திட்டம் அல்லது சலுகை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் முன் அதன் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். அதிகாரபூர்வ அரசாங்கத் திட்டங்கள் பொதுவாக பிரத்யேக இணையதளங்கள் அல்லது தகவல்களைப் பரப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்களைக் கொண்டிருக்கும்.

2. நம்பத்தகாத சலுகைகளில் சந்தேகம் கொள்ளுங்கள். முறையான சரிபார்ப்பு அல்லது தகுதி அளவுகோல்கள் இல்லாமல் சட்டபூர்வமான திட்டங்கள் பெரிய தொகைகளை வழங்குவது அரிதாகும்.

3. கோரப்படாத செய்திகள் அல்லது விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில், UPI பின்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.

4. சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் பரவும் பொதுவான மோசடிகள் மற்றும் மோசடி தந்திரோபாயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஏதேனும் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930-ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்” தமிழ்நாடு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

The post பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: