பெரியகுளம் :பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்தபோது, வராக நதியில் குதித்து தப்பிய கைதியை போலீசார் மடக்கி பிடித்தனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில், தேவதானப்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் (47) கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக இவரை, பெரியகுளத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மதியம், ஆயுதப்படை போலீசார் 2 பேர் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் தேனி சிறைக்கு அழைத்து செல்ல பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகே வந்தபோது, தெய்வேந்திரன் திடீரென போலீசாரை கீழே தள்ளிவிட்டு வராக நதி ஆற்றில் குதித்து தப்பினார். உடனே போலீஸ்காரர்கள் இருவரும், அவரை துரத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த தென்கரை போலீசார், வராக நதி ஆற்றின் எதிர் திசையில் சென்று கைதி தெய்வேந்திரனை மடக்கி பிடித்தனர். பின்னர் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பியோடிய சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்து வந்தபோது வராக நதியில் குதித்து தப்பிய கைதி சிக்கினார் appeared first on Dinakaran.