துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

துபாய்: பிரபல டபுள்யு.டி.ஏ தொடரான துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான அரினா சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்), துபாய் தொடரில் நேரடியாக 2வது சுற்றில் களம் கண்டார். குரோஷியாவின் டோனா வேகிச்சுடன் (27வயது, 31வது ரேங்க்) நேற்று மோதிய சபலென்கா, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றார். எனினும் அடுத்த 2 செட்களிலும் வேகம் காட்டிய டோனா வேகிச் அதிரடியாக 6-3, 6-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 22 நிமிடங்களுக்கு நீடித்தது.

முன்னணி வீராங்கனைகள் யெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), மரியா சாக்கரி (கிரீஸ்), மார்கெட்டா வோண்ட்ருசோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா(உக்ரைன்), லியுட்மிலா சாம்சனோவா (ரஷ்யா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினர். கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டஸ் தனது 2வது சுற்றில் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜாஸ்மினிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

The post துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: