காங்கிரஸ் தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த செல்வபெருந்தகை நியமனம்: எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகையை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி., பிரிவு சார்பாக நன்றியை தெரிவித்து வரவேற்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கக்கன், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் பணியாற்றியிருக்கிறார்கள்.

அவர்களது காலத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் திரண்டு நின்றனர் என்பது வரலாறு. அதன்பிறகு பட்டியலினத்தவரை நியமிப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டது. இன்றைக்கு சமூக நீதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி, தலித் மக்களை அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்க்க விரும்புகிறது என்பதற்கு கு.செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் தலைவராக்கியது சிறந்த சான்று.

செல்வப்பெருந்தகை தமது பதவிக் காலத்தில் மீண்டும் பட்டியலின மக்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மாற்றுவார் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதும் எஸ்சி, எஸ்டி., துறை நடத்தும் தலித் பாசறையில் முதல் நிகழ்ச்சியாக பங்கேற்க இருப்பதில் பெருமிதம் அடைகிறோம். இதே போல சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமாரை நியமித்ததற்காகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

The post காங்கிரஸ் தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த செல்வபெருந்தகை நியமனம்: எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: