இன்று கோயில் தேர் வெள்ளோட்டம் கண்டதேவியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை: மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கோயிலுக்கு புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் இன்று (பிப்.11) நடக்கிறது. இதையடுத்து கோயில் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்.பி அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார். தேவகோட்டை அருகே கண்டதேவியில்  சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தேர் வெள்ளோட்டம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இன்று (பிப்.11) காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வருவாய்துறையினருடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தேர் வெள்ளோத்தை காண வருவோருக்கான தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வெள்ளோத்திற்கான பாதுகாப்பு பணிகளில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கோயில் வளாகம் மற்றும் தேர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நேற்று தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட எஸ்.பி அரவிந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார் இதற்கிடையே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் சமஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட துணை ஆணையாளர் பழனிகுமார், உதவி ஆணையாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர் வெள்ளோட்டம் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

The post இன்று கோயில் தேர் வெள்ளோட்டம் கண்டதேவியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை: மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: