காலி பணியிடங்களை நிரப்பிட கோரி அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், பிப். 10: மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிட கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் ஆயிரத்து 850க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், தொகுப்பூதிய மருந்தாளுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருந்தாளுநர்களுக்கு ஊக்கதொகை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ராஜா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தினை மாநில துணை தலைவர் பைரவநாதன் துவக்கி வைத்து பேசினார். இதில் மாநில பொது செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் விஸ்வேஷ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post காலி பணியிடங்களை நிரப்பிட கோரி அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: