தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

பூந்தமல்லி: மதுரவாயலில், தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து பணம், லேப்டாப்பை திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (35). இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், 1வது மெயின் ரோடு பகுதியில் ஆட்டோ கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நிறுவனத்தின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.26 ஆயிரம், 3 லேப்டாப்கள் மற்றும் 4 செல்போன்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனைப் பிடித்து விசாரித்தபோது தனது தந்தைதான் நிறுவனத்தில் திருடுமாறு கூறியதாக தெரிவித்தான். இதனையடுத்து போலீசார் சிறுவன் மற்றும் அவனது தந்தையான மதுரவாயலைச் சேர்ந்த ரமேஷ் (51) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம், 3 லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: