அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை ஆசிரியர் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு போன் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.  இதைத்தொடர்ந்து, அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த நபர் சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கேசவன்(50) என்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில், கேசவன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தில் வசித்து வந்து உள்ளார். அப்போது அரக்கோணத்தை சேர்ந்த ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று உள்ளார்.

அந்த பணத்தை அந்த நபர் கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கேசவன் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனையில் வெடிகுண்டும் வெடிக்கும் என கூறியது தெரிந்தது. இதையடுத்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.

The post அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: