அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை.. ரூ.1 கோடி அபராதம்: புதிய மசோதா மக்களவையில் தாக்கல்!!

டெல்லி: நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கில் புதிய மசோதாவை ஒன்றிய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை.. ரூ.1 கோடி அபராதம்: புதிய மசோதா மக்களவையில் தாக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: