யாத்திரையில் ஜார்கண்ட் புது முதல்வர்; பாஜகவின் சதியை ‘இந்தியா’ கூட்டணி முறியடித்தது: ராகுல்காந்தி பேச்சு

ராஞ்சி: பாஜகவின் சதியை ‘இந்தியா’ கூட்டணி முறியடித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவரது யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் சம்பாய் சோரன் வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘ஜார்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பாஜக சீர்குலைக்க முயன்றது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணி எதிர்த்து நின்று பாஜகவின் சதியை முறியடித்தது. பணபலம் மற்றும் விசாரணை அமைப்புகளை பாஜக தன்வசம் வைத்திருந்தாலும், அதைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சப்போவது இல்லை’ என்று கூறினார்.

The post யாத்திரையில் ஜார்கண்ட் புது முதல்வர்; பாஜகவின் சதியை ‘இந்தியா’ கூட்டணி முறியடித்தது: ராகுல்காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: