சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: பெரியகுளம் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன் அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மே 31ம் தேதியில் கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கேற்ப தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் ஒன்றும் உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதுடன், வெப்பமும் குறைந்துள்ளது.

அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ. மழை பொழிந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இடையபட்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக பெரியகுளம் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 49.63 கனஅடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

பெரியகுளம், வடுகப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரத்தில் உள்ள வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக நதியில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: