எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.11.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 8ம் தேதி அன்று சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும்.
மேலும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விணப்பதாரர் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பங்கேற்க தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வரும் 8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.