அரியாங்குப்பத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருட்டு

தவளக்குப்பம், ஜன 23: புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு பிரம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் முத்துவேல் (55). இவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவரது தொழிலுக்காக பயன்படுத்தி வரும் இரும்பு பொருட்கள் மற்றும் சென்ட்ரிங் இரும்பு ஷீட்டுகள் என அனைத்தும் இவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் அடுக்கி வைத்துள்ள இரும்பு ஷீட்களை எடுக்க சென்றார். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்ட இருந்த இரும்பு ஷீட்டுகள் குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அதனை கணக்கிட்டு பார்த்ததில் 60 இரும்பு ஷீட்டுகள் வரை காணாமல் போயிருப்பது தெரிந்தது. திருடு போன இரும்பு ஷீட்டின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும். உடனே அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் இரவு மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து எடுத்து சென்றதாக தெரிந்தது. இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் முத்துவேல் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகாநந்தம் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அரியாங்குப்பத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: