சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் திரளானோர் பங்கேற்க வேண்டும் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அழைப்பு

திருச்செங்கோடு, ஜன.20: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (21ம்தேதி) நடைபெற உள்ளது. திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை போல, இம்மாநாடு ‘2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் ஜனநாயக போர்க்களத்திற்கு கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சி பாசறையாக அமையவிருக்கிறது. மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு’ என்பதற்கிணங்க, மாநில உரிமைகளை காப்பது தான் இந்தியாவை காப்பது.

அந்த வகையில் ‘இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு’ என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வகையில், சிறப்பான முறையில் பிரமாண்டமான திருப்புமுனை மாநாடாக அமையவுள்ள மாநாட்டில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இளைஞர் அணியினர் வெண் சீருடையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுரா செந்தில் தெரிவித்துள்ளார்.

The post சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் திரளானோர் பங்கேற்க வேண்டும் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: