இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைத்து முதல்வராக சசிகலா நினைத்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை. இதனால், சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் காவலாளி ஓம்பகதூரை கொன்று உள்ளே சென்று ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. கொள்ளை நடந்தபோது மின்சாரம் ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்பட்டு இருந்தது.
கொடநாடு எஸ்டேட் முன்னாள் அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இல்லாமல் இந்த கொலை, கொள்ளை நடந்து இருக்காது என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிமுக தொண்டர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் தனது மனைவி மற்றும் மகளுடன் வாளையாறு அருகே சென்றபோது கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சயானின் மனைவி, மகள் பலியாகினர். சயானின் உயிர் தப்பி
னார். சேலம் அருகே நடந்த விபத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.
இந்த சூழலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி வரும் ஜன.30, 31ம் தேதிகளில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தோல்வி முடிந்தது. இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டினார். அதிமுகவை நிச்சயம் இணைப்பேன் என்று கூறி வருகிறார். இந்த சூழலில், ஜெயலலிதா மறைவு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக சசிகலா நேற்று கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு எஸ்டேட் நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
கொடநாட்டில் சசிகலா கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், ‘கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஓம் பகதூர், சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையை பெற்று தருவார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை அமைக்கப்பட்டு திறக்கப்படும். பிளவுபட்ட அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது’ என்றார்.
The post ஜெயலலிதா மறைவு, கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுக்கு பின் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார் சசிகலா: வழக்குகள் சூடு பிடித்து உள்ள நிலையில் திடீர் பயணத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.