இதுவரை அரியானாவில் மட்டுமே தேசிய சுங்க மற்றும் நேரடி வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திராவில் புதிதாக கட்டப்பட்ட தேசிய சுங்க மற்றும் நேரடி வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மையத்தை (என்.எ.சி.ஐ.என்) பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, முதல்வர் ஜெகன் மோகனுடன் இணைந்து கட்டிடங்களை ஆய்வு செய்து ஐஆர்எஸ்க்கு தேர்வு செய்யப்பட்டவர்களுடன் பிரதமர் மோடி நேர்காணல் நடத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் போதைப்பொருள் தடுப்பு மையம் நிறுவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதால் 11 நாள் விரதம் மேற்கொண்டு வருகிறேன். ஜனநாயக நாட்டில் அரசுகள் மக்களின் சேவகர்கள். கடந்த காலங்களில் வரி விதிப்பு முறை புரியவில்லை. ஜிஎஸ்டியை கொண்டு வந்து வரிகளை எளிமையாக்கி உள்ளோம். மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தை அவர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அதுவே ராமாராஜியத்தின் ஆட்சி’ என்றார்.
* கொச்சியில் ரோடு ஷோ
தனி விமானம் மூலம் நேற்று மாலை 6.50 மணியளவில் கொச்சி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மகாராஜாஸ் கல்லூரி முதல் அரசு விருந்தினர் மாளிகை வரை 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் திரண்டிருந்த மக்கள் வாகனம் மீது பூக்களை தூவி வரவேற்றனர். நேற்று இரவு கொச்சியில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை 6 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் புறப்பட்டு செல்கிறார். இன்று குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 8.45 மணியளவில் நடிகர் சுரேஷ் கோபியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.
The post ஜனநாயக நாட்டில் அரசுகள் மக்களின் சேவகர்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.