சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் ரத்தாகுமா ? : மனு மீதான விசாரணைக்கு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரும் மனு ஜன.19ல் விசாரிக்கப்பட உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான துணைவேந்தர் ஜெகநாதனுக்கு சேலம் குற்றவியல் நீதிமன்றம் அன்றே ஜாமின் வழங்கியது.

இதனை எதிர்த்து சேலம் போலீசார், புகார் தாரரான இளங்கோவன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெகநாதனுக்கு ஜாமின் வழங்கியது குறித்து விளக்கமளிக்க மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது. இதனிடையே ஜெகநாதனின் கூட்டாளிகளான பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு, துணைப்பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை அமைத்து சேலம் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில, ஜெகநாதன் ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் காவல்துறை தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமீன் ரத்து செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். நிபந்தனை ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது எனக் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 19ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் ரத்தாகுமா ? : மனு மீதான விசாரணைக்கு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: