ஆஸ்திரேலியாவுடன் 3வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் பாக். 313 ரன் குவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டின் முதல் நாளிலேயே, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாக். முதலில் பேட் செய்தது. அப்துல்லா ஷஃபீக், சைம் அயூப் டக் அவுட்டாக, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. கேப்டன் ஷான் மசூத் 35, பாபர் அஸம் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சவுத் ஷகீல் 5 ரன்னில் வெளியேறினார்.

ரிஸ்வான் – ஆஹா சல்மான் இணை 6வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தது. ரிஸ்வான் 88 ரன், சஜித் கான் 15, ஆஹா சல்மான் 53 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஹசன் அலி டக் அவுட்டானார். ஜமால் – மிர் ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 86 ரன் சேர்த்து அசத்தியது. ஜமால் 82 ரன் (97 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி லயன் சுழலில் ஸ்டார்க் வசம் பிடிபட, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன் குவித்து ஆல் அவுட்டானது (77.1 ஓவர்). ஹம்சா 7 ரன்னுடன் (43 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட், ஸ்டார்க் 2, ஹேசல்வுட், லயன், மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சமில்லாததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னர் (6 ரன்), கவாஜா (0) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஆஸ்திரேலியாவுடன் 3வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் பாக். 313 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: