பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்: 25ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 19ம் தேதி காலை பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முருகனின் மூன்றாம் படைவீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர்.

தைப்பூசத் திருவிழாவிற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை கிளம்பி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா வரும் 19ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி – தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்க உள்ளது. அன்றிரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்ட நிகழ்ச்சி 25ம் தேதி நடக்க உள்ளது. அன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்: 25ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: