கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம்

கூடலூர்: கேரளாவைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் காரில் தற்கொலை செய்து இறந்து கிடந்தது கம்பம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், கோட்டயம், புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் சக்கரியா (60). மனைவி மெர்சி (58). மகன் அகில் ஜார்ஜ் (29). ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்னை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து மூவரும் கம்பம் மெட்டிலிருந்து தேனி மாவட்டம், கம்பம் செல்லும் பாதையில் மலையடிவாரப்பகுதியான சேனை ஓடை அருகே காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலை அந்த வழியாக தோட்ட வேலைக்கு சென்றவர்கள், ஒரு கார் கேட்பாரற்று நிற்பதைப் பார்த்தபோது மூவரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வந்து பார்வையிட்டனர். கார் உள்பக்கமாக பூட்டியிருந்தது. தேனி மாவட்ட தடயவியல் துறை அதிகாரிகள் வந்து காரை திறந்தனர். பின்னர் மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரின் பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில் இறந்தவர்கள் விவரம் தெரிய வந்தது. மேலும் இவர்களை கடந்த 12ம் தேதி முதல் காணவில்லை என ஜார்ஜ் சக்கரியாவின் தங்கை அன்னம்மா சஜி, கோட்டயம் வாகத்தானம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: