கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம்

கடலூர்: கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் கண்டக்டர் நெஞ்சுவலியில் துடித்தார். உடனடியாக பஸ்சை மருத்துவமனைக்கு டிரைவர் ஓட்டிச் சென்று சேர்த்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து கரூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். கரூர் மாவட்டம் வெங்கல் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (47) கண்டக்டராக இருந்தார்.

டிரைவர் கோபால் பேருந்தை ஓட்டி சென்றார். கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சென்றபோது கண்டக்டர் பன்னீர்செல்வத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனது இருக்கையிலேயே துடிதுடித்து மயங்கினார். இதை பார்த்த டிரைவர் கோபால், உடனடியாக பேருந்தை பயணிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டி சென்றார். அங்கு பன்னீர்செல்வத்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாற்று டிரைவர் மற்றும் கண்டக்டரை ஏற்பாடு செய்து பயணிகளுடன் பேருந்து மீண்டும் கரூர் புறப்பட்டு சென்றது.

The post கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: