தமிழ்நாடு அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பூண்டி ஒன்றியம் தேர்வு: கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம், 32 துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனை

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் வளமிகு வட்டாரங்கள் குறித்த கூட்டத்தில் பூண்டி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் 32 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். தமிழ்நாடு அரசு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் வளமிகு வட்டாரங்கள் குறித்த கூட்டத்தில் பூண்டி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வளமிகு வட்டாரங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஓ.என்.சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சி செயலர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

பூண்டி ஊராட்சி ஒன்றியம், குறியீடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்தும், பூண்டி வட்டாரத்திலுள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்துதல், அங்கன்வாடி மையம் மற்றும் பல்வேறு வகையான கட்டுமான வசதிகள் உருவாக்குதல், பள்ளி மற்றும் பிறதுறைகளில் பணியாற்றும் அரசு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்தல் உள்பட பல்வேறு பணிகளை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை மேம்படுத்தவும், அதனை முதன்மை ஊராட்சி ஒன்றியமாக மாற்றுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் உள்பட இந்தக்கூட்டத்தில், மாவட்ட அளவிலான 32 துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கினார்.

The post தமிழ்நாடு அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பூண்டி ஒன்றியம் தேர்வு: கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம், 32 துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: