போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மாணவனுக்கு மேல்முறையீட்டில் விடுதலை: உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் 2020ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து, ராஜை கைது செய்து அவர் மீது பாலியல் வன்புணர்வு செய்தல் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் ஆரணி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றம் ராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ,000 அபராதமும் விதித்து கடந்த ஜூன் 30ம் ேததி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி நிர்மல்குமார் கடந்த நவம்பர் 10ம் தேதி ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 2023 நவம்பர் 16ம் தேதி ராஜுக்கு அந்த பெண்ணுடன் அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்து போளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜுவின் மேல் முறையீடு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரு வீட்டாரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு தகுதி இழப்பாக கருதப்படக் கூடாது என தீர்ப்பளித்தார்.

The post போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மாணவனுக்கு மேல்முறையீட்டில் விடுதலை: உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: