தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார். ரயில்வே துறையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிவார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணிப்புரிகிறார்கள். இதனால் பயணிகளுக்கும், ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக முன்பதிவு செய்யும் போது ஏராளமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதேபோல் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர்களிடையேயும் மொழி பிரச்னையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த பிரச்னைகளை சரி செய்ய தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியை சொல்லிக்கொடுப்பது என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரயில்வே, தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம் கருதுகிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது.

எனவே அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ‘MyGov’ இந்தியாவுடன் இணைந்து உருவாக்கிய ‘பாஷா சங்கம்’ எனும் மொபைல் செயலியையும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: