இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு

 

கோவை, டிச. 20: இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பது தொடர்பான கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம் அருகே தாமஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜி வரவேற்றார். பின்னர் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை இயக்கி கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி வார விடுமுறை நாட்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்காமல் உள்ளது.

ஆம்புலன்ஸ் வாகன சேவையை தங்குதடையின்றி இயக்க வேண்டும். ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். கொரோனா நோய் பரவலுக்கு பிறகு சேவையில் இருந்து அகற்றிய ஆம்புலன்ஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வருகிற ஜனவரி மாதம் 8ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அரசு இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

The post இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: