ஊட்டி, நவ.29: குன்னூர் வட்டத்தில் நத்தம் இடங்களில் பட்டா மாறுதல் செய்யவும் அல்லது உட்பிரிவு செய்து கொள்ளவும், சம்பந்தப்பட்ட மனுக்களை பொது சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பொதுமக்களுக்கு நிலம் தொடர்பான பல்வேறு தேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே நில ஆவணங்கள் பெறவும், இணைய வழியில் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெறவும் தற்போது தமிழ்நாடு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், நத்தம் நில ஆவணங்கள் இணைய வழி சேவைக்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக குன்னூர் வட்டத்தில் உள்ள 8 வருவாய் கிராமங்களின் நத்தம் ஆவணங்கள் கடந்த 10.10.2023ம் தேதி முதல் இணைய வழி கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் மேற்கண்ட குன்னூர் வட்டத்தின் நத்தம் இடங்களில் பட்டா மாறுதல் செய்யவும் அல்லது உட்பிரிவு செய்து கொள்ளவும், சம்பந்தப்பட்ட மனுக்களை பொது சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் இணைய வழி சேவையின் மூலம் https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் நத்தம் அ-பதிவேடு, சிட்டா மற்றும் புலவரைப்படங்கள் போன்ற நில ஆவணங்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன் அடையலாம்,இவ்வாறு அவர் கூறினார்.
The post நத்தம் இடங்களில் பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.