காசாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் காஷ்மீர் திரும்ப காத்திருக்கிறேன்: இந்திய தாய், மகள் பேட்டி


கெய்ரோ: காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய தாய், அவரது மகள் ஆகியோர் தாங்கள் விரைவில் காஷ்மீர் திரும்ப காத்திருக்கிறோம் என்றனர். இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில், காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர். நாளுக்கு நாள் போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து, அவர்கள் தங்களை மீட்குமாறு ஒன்றிய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களை பத்திரமாக மீட்டன. கடந்த 13ம் தேதி அவர்கள் காசா எல்லையை கடந்து எகிப்தின் கெய்ரோ சென்றடைந்தனர்.

இதுகுறித்து லுப்னா கூறுகையில், ‘காசாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. எங்களை மீட்டதற்காக ஒன்றிய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.

The post காசாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் காஷ்மீர் திரும்ப காத்திருக்கிறேன்: இந்திய தாய், மகள் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: