* இந்தியா பைனலுக்கு முன்னேறியதை பாகிஸ்தானில் இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. தொடர்ந்து இந்திய அணியை பலவகைகளிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான முன்னாள் வீரர் சிக்கந்தர் பகத், ‘இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் போடும் விதம் விசித்திரமானது. மற்ற கேப்டன்களை ஒப்பிடும் போது ரோகித், காசை வெகு தொலைவில் வீசுகிறார். அதனால் எதிர் தரப்பு கேப்டன்கள் முடிவு என்ன என்பதை பார்க்க முடிவதில்லை’ என்று புலம்பி உள்ளார்.
* விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நவ.23ம் தேதி தொடங்குகிறது. பெங்களூர், ஆலூர், ஜெய்பூர் உட்பட 9நகரங்களில் நடைபெறும் இந்தப்போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு உட்பட 38அணிகள் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டம் டிச.16ம்் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும்.
* ஜப்பானின் குமாமோடோ நகரில் மாஸ்டர்ஸ் ஜப்பான் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்(31வயது, 8வது ரேங்க்), சீன தைபே வீரர் டிய்ன் சென் சூ(33வயது, 12வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 13நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 19-21, 21-16, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் டிய்ன் சென் கடுமையாக போராடி வென்றார். அந்த ஆட்டத்துடன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் எல்லோரும் தோற்று வெளியேறினர்.
* திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவர் தினேஷ் ராஜசேகரன்(17). பவர்லிப்டிங் விளையாட்டில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். கால் டாக்சி டிரைவரின் மகனான தினேஷ், சர்வதேச போட்டிகளில் வென்றவர்களுக்காக தமிழக அரசு அறிவித்த உயரிய ஊக்கத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். ‘அதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி) விரைந்து வழங்கினால், மற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும்’ என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.