பள்ளி, கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்: சுகாதாரத்துறை சார்பில் நடக்கிறது

சென்னை: தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் நோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 2025ம் ஆண்டுக்குள் தொழுநோயை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழுநோயின் முக்கிய அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை ஒரு மாத கால முயற்சியைத் தொடங்கியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழுநோய் மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,000 புதிய தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போது, 2,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழுநோயை ஒழிப்பதை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2027ம் ஆண்டிற்குள் புதிய பாதிப்புகளை 70சதவீதம் குறைப்பதும், குழந்தைகளுக்கான பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளை 90சதவீதம் குறைப்பதும் இலக்கு. தொழுநோயைக் குறைக்க பொதுமக்களின் ஆதரவு மிக முக்கியமானது. தொழுநோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். உணர்வு இழப்பு, தோல் நிறமாற்றம், புற நரம்புகள் தடிமன் ஆவது மற்றும் தோலில் தோற்றம் மாறுவது ஆகியவை தொழுநோய்க்கான அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும் பிற அறிகுறிகளும் உள்ளன அவை தோல் பளபளப்பாவது, உடல் முழுவதும் காது மடல்கள் மற்றும் நிரம்புகள் தடித்தல், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் கைகால்களின் சிறிய தசைகளின் பலவீனம் மற்றும் கண் இமைகளை மூட இயலாமை போன்றவை அடங்கும். பொதுமக்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேலாண்மை குறைபாடுகளை தடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இது குறித்து பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்குள் தொழுநோயை ஒழிக்க முடியும். ஒழிப்பது என்றால் இதை முழுமையான ஒழிப்பு என்று அர்த்தம் கொள்ள முடியாது. இந்த நோய் ஒரு பொது சுகாதார பிரச்னையாக இல்லாமல் போகும் நிலை என்பதே அர்த்தமாகும். குறிப்பாக, புதிய நோயாளிகள் அல்லது புதிய குழந்தை பருவ பாதிப்புகள் ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளி, கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்: சுகாதாரத்துறை சார்பில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: