ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்த மனித வடிவ ரோபோ அறிமுகம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் நவீன மனித வடிவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மனித வடிவ ரோபோ தொழில்நுட்பத்தை ஐரிஸ் அறிமுகப்படுத்தும் முதல் பள்ளியாகும். இது நவீன தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட கல்வியை வழங்கும். ஐரிஸ் என்பது ஒரு சாதாரண தொழில்நுட்ப சாதனமல்ல. இது செயற்கை நுண்ணறிவு, தொடர்பாடல் மற்றும் ஸ்டெம் கல்வியை மேம்படுத்தும் வலுவான கல்வி கருவியாகும். ஐரிஸ் மாணவர்களை ஆராய்ச்சி செய்ய, புதுமைகளை உருவாக்க மற்றும் எதிர்கால தொழில்நுட்ப உலகில் நம்பிக்கையுடன் முன்னேறத் தூண்டும்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஐரிஸ் என்பது மாணவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட மனித வடிவ ரோபோ ஆகும். இது கேட்கவும், புரிந்துகொள்ளவும், செயற்கை நுண்ணறிவின் மூலம் பதிலளிக்கவும் திறன் பெற்றுள்ளது. இதனால் கற்றல் செயல்பாடுகளுடன் கூடியதாக மாறுகிறது. மனிதனைப் போன்ற தோற்றம் மற்றும் தொடர்பாடல் திறன் கொண்ட ஐரிஸ், மாணவர்கள் கேள்விகள் கேட்டு, நேரடியாக கலந்துரையாடி, புதுமையான முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறையை மாற்றுகிறது. இது கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குகிறது.இந்த ரோபோ குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமின்றி கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமான பதில்களையும் அளிக்கிறது.

மேலும், இந்த ரோபோவுக்கு இணைய வசதியும் இருக்கிறது. இதனால் சிக்கலான பாடங்களையும் கூட மாணவர்களுக்குப் புரியும் வகையில் புதிய நுணுக்கங்களுடன் எளிமையான பதில்களை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்பதால் இந்த வகை ரோபோவை பாடம் நடத்த மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: