தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெற வேண்டும்: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் வலியுறுத்தல்

சென்னை:வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 1947ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாணையில், பெயர் பலகைகள் விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தொகை ரூ.50ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டது.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, “தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் ஆட்சிமொழி சட்ட வார நிகழ்ச்சியில் ஒரு நாள் நிகழ்ச்சியாக, வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையாக அமைவதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி, விழிப்புணர்வு கூட்டங்கள் வணிகர் சங்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, வருங்காலங்களில் அனைத்து பெயர் பலகைகளிலும் தமிழ் முதன்மையாக இடம்பெற வேண்டும் என்றார்.

The post தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெற வேண்டும்: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: