சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடமாடும் மருத்துவ வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஓமியோபதி துறை இயக்குநர் கணேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மழைக்காலங்களில் நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற அதிகபட்சமான மருத்துவ முகாம்கள் தற்பொழுதுதான் நடத்தப்படுகிறது. குடிசைப்பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 4 லட்சத்து 16,000 குளோரின் மாத்திரைகளும், தமிழகத்தில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 8-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ேவண்டும். நோவோ வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ படிப்பில் வன்னியர்களுக்கு 10.5% வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க கால அவகாசம் இருக்கிறது. இட ஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது என்றார். …
The post சென்னையில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குடிசைவாசிகளுக்கு ½ கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.