செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங். தலைவரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: விளக்கம் கேட்க கட்சி தலைமை முடிவு

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி எதிர் கோஷ்டியை சேர்ந்த சிலர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட தலைமைக்கு எதிராக செயல்பட்டதால் விளக்கம் கேட்கவும் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக சுந்தரமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக மாவட்ட தலைவராக உள்ள நிலையில், அவருக்கு எதிராக அம்மாவட்டத்தை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் சுந்தரமூர்த்திக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

மாவட்ட தலைமை சார்பில் கூட்டங்கள் நடத்தினால், அதற்கு எதிராக போட்டி கூட்டம் நடத்துவது என்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, சம்பந்தப்பட்ட சில நிர்வாகிகளை நீக்கி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.இதனால், ஆத்திரமடைவந்த எதிர் கோஷ்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து முற்றுகையிட்டு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தமூர்த்தியை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

மேலும், மாவட்ட தலைவரை நீக்கக்கோரி அங்கிருந்த மூத்த தலைவர்களிடம் மனு அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், மாவட்ட தலைமையை மீறி சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அவர்களிடம் விளக்கம் கேட்கவும் கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங். தலைவரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: விளக்கம் கேட்க கட்சி தலைமை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: