ஊட்டி, செப்.29: ஊட்டி அருகே கீழ்கவ்வட்டி செல்லும் சாலையில் மண் குவியல்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் சாலைகளில் தேங்கி நின்று விடும். இதனால், பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடும்.
சில இடங்களில் சாலைகளில் பெரிய அளவிலான மண் திட்டுகள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், சிறிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளில் இதுபோன்று தொல்லைகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஊட்டி அருகே கீழ்கவ்வட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலையில் மண் குவியல்கள் காணப்படுகிறது.
சில இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலைகளில் சிறிய வாகனங்களை இயக்க பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையில் உள்ள மண் குவியல்களை அகற்றிவிட்டு, சாலையோரங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கீழ் கவ்வட்டி செல்லும் சாலையில் மண் குவியல்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.