பந்தலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

 

பந்தலூர்,செப்.25: பந்தலூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பொன்னானி ஆற்றில் கரைக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி,அய்யன்கொல்லி, பிதர்காடு,நெலாக்கோட்டை உள்ளிட்ட பந்தலூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் 80க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து வந்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் இருந்து நேற்று வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக பந்தலூர் ரிச்மண்ட் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

அங்கிருந்து பந்தலூர் பஜார்,மேங்கொரேஞ்,உப்பட்டி, நெல்லியாளம் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பொன்னானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். ஏடிஎஸ்பி சௌந்தராஜன் தலைமையில் தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர்கள் திருஞ்ஞானசம்மந்தம் மற்றும் அமுதா ஆகியோர் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post பந்தலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: