சீன எல்லையில் பல்வேறு கட்டுமான நடவடிக்கைகளை இந்தியா செய்து வருகிறது: எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் தகவல்

சண்டிகர்: இந்திய, சீன எல்லையில் பல்வேறு கட்டுமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய, சீன எல்லைப் பிரச்னை நீடிக்கும் நிலையில் இந்திய எல்லையில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. இது இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சண்டிகரில் எல்லை சாலைகள் அமைப்பின் விமான விநியோகப் பிரிவின் கட்டுமான பணிகளை எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் லென்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் சவுத்ரி, “புதிய தொழில்நுட்பங்கள், முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள எல்லை சாலைகள் அமைப்புக்கு ஒன்றிய அரசு முழு ஆதரவு அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அமைப்புக்கான முதலீடு 100 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சீன எல்லையில் எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் பிற நிறுவனங்களால் பல்வேறு கட்டுமான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

எல்லை சாலைகள் அமைப்பின் செயல்பாட்டு வேகம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.8,000 கோடி மதிப்பிலான 300 எல்லை சாலை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 295 சாலை திட்டங்கள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் விமான நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளோம். அடுத்த 4 மாதங்களில் மேலும் 60 திட்டங்கள் தயாராகி விடும். சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பாதுகாப்பு படையினருக்கானது மட்டுமல்ல. இது தொலைதூர கிராமங்கள், அங்கு வசிக்கும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் பெரிதும் உதவும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post சீன எல்லையில் பல்வேறு கட்டுமான நடவடிக்கைகளை இந்தியா செய்து வருகிறது: எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: