திருத்தணி அடுத்த புச்சிரெட்டி பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை வசதி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த கழிப்பறை வசதிகளை சீரமைப்பு என்ற பெயரில் ஏனோ, தானோ என்ற பணிகள் செய்துவிட்டு பணத்தை எடுத்து விடுகின்றனர் என கூறப்படுகிறது. இங்குள்ள கழிப்பறைக்கு போதிய தண்ணீர் வசதியும் எதுவும் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், பள்ளி வளாகத்தில் பல இடங்களில் புதர்கள் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள், பாம்புகள் அடிக்கடி பள்ளி மாணவ, மாணவிகளை மிரட்டி வருகின்றன. இதே போன்று பள்ளி கட்டிடத்தின் மீது செடிகள் வளர்ந்து கட்டிடத்தின் உறுதி தன்மையை சேதம் ஏற்படுத்துகிறது. எனவே, கல்வித்துறையும் சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறையும் மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.