மாவீரர் பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி!!

சென்னை : மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள்!.அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்!,”எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி : ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக முதன்முதலில் வாள் சுழற்றி , கம்பீரக்குரலால் சுதந்திர வேட்கை எழுப்பி, வெள்ளையனே வெளியேறு என்று வீரமுழக்கமிட்டு எண்ணற்ற வெற்றிகளை கண்டு, தன் இறுதி மூச்சு உள்ளவரை தாய்நாட்டிற்காக போரிட்டு ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கும் விடுதலைப்போரில் வழிகாட்டியாக திகழ்ந்த #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 308 வது பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை :இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன் பிறந்த தினம் இன்று. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவர் நெற்கட்டான் செவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய மாவீரர். திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு ஆலயங்களுக்கு அணிகலன்கள் வழங்குவது, குளம் அமைத்துக் கொடுத்தது என நாட்டுப்புறப் பாடல்களும் செப்பேடுகளும் இவர் பெருமையைக் கூறுகின்றன. வீரத்தில் மட்டுமல்ல, இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாவீரர் பூலித்தேவன் அவர்கள் பெருமையைப் போற்றுவோம்.

The post மாவீரர் பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Related Stories: