வேளாங்கண்ணி ரயில் இரணியலில் நின்று செல்ல நடவடிக்கை பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

குளச்சல்,ஜூலை 30 : பிரின்ஸ் எம்.எல்.ஏ தெற்கு ரயில்வே அதிகாரிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. இந்த ரயில் எண் 06020 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, 30ம் தேதி, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் டவுண் , திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் வழியாக வியாழக்கிழமை காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கமாக ரயில் எண் 06029 வேளாங்கண்ணியில் இருந்து வியாழக் கிழமை மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, நாகர்கோவில் டவுண், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில் குளச்சல் சட்டமன்ற தொகுதி மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இரணியல் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரணியல் ரயில் நிலையம் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகாக்களை விடவும் கல்குளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட தாலுகா ஆகும். இந்த தாலுகாவை சேர்ந்த மக்கள் அனைவரும் இரணியல் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்காமல் இயக்குவது இந்த தாலுகா மக்களை புறக்கணிக்கும் செயலாகும். ஆகவே இந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வேளாங்கண்ணி ரயில் இரணியலில் நின்று செல்ல நடவடிக்கை பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: