தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனிமாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயன புண்யகாலத்தையொட்டி ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி மாத பிரம்மோற்சவம். ஆண்டுதோறும் தை மாத துவக்கத்தையொட்டி உத்திராயன புண்யகால உற்சவமும், ஆடி மாத துவக்கத்தையொட்டி தட்சிணாயன புண்ய கால உற்சவமும் நடத்தப்படுகிறது. அதன்படி தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி ஆனிமாத பிரம்மோற்சவம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர் உற்சவ மூர்த்திகளான விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் காலை 6.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனிமாத பிரம்மோற்சவத்தையொட்டி 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனிமாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: