சோதனை ஓட்டம் நிறைவடையாததால் தள்ளி போகிறது: புதிய சர்வதேச விமான முனையம் ஜூலையில் செயல்பாட்டுக்கு வருகிறது

 

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கத்தில், ஒருங்கிணைந்த புதிய சர்வதேச விமான முனையம், முதல் ஃபேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இந்த புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து சில அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டன. பின்னர் மே 3ம் தேதியில் இருந்து, சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. அதைத்தொடர்ந்து, நடுத்தர விமானங்களும் குவைத், இலங்கை, எத்தியோபியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவிலும் நடந்தன. ஆனால் அதிகாரிகள் அறிவித்தபடி, சோதனை விமான ஓட்டங்கள், கடந்த மே இறுதிக்குள் நிறைவடையவில்லை. ஒரு சில பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அவற்றை தீர்க்கும் விதத்தில், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் (12ம் தேதி) முதல், 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு முதற்கட்டமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட்,தோஹா, டாக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரும் சர்வதேச விமானங்களும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதைப் போன்று ஜூன் முழுவதும் இதே நிலைப்பாடு நீடிக்க இருக்கிறது. பின்னர் ஜூலை மாதத்தில் இருந்து சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், முழு அளவில் செயல்பட இருக்கிறது. அப்போது சிறிய, நடுத்தரக மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் இயங்க தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

The post சோதனை ஓட்டம் நிறைவடையாததால் தள்ளி போகிறது: புதிய சர்வதேச விமான முனையம் ஜூலையில் செயல்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: