பழுதடைந்த கரியமலை பெரியார் நகர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 

மஞ்சூர்,ஜூன்9: பழுதடைந்த கரியமலை பெரியார்நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பெரியார் நகர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.பெரும்பாலானோர் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், மேரக்காய் போன்ற மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கரியமலை பிரிவில் இருந்து பெரியார்நகர் தொட்டனி பகுதி வரையிலான சாலை பழுதடைந்து மிகவும் மோசமான முறையில் காட்சியளிக்கிறது.

சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் முழுவதும் பெயர்ந்து கரடு,முரடாகவும் பல இடங்களில் குழிகள் மற்றும் படிகட்டுகள் போல சாலை மாறிவிட்டதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சாலையோர கால்வாய் இல்லாததால் மழை வெள்ளம் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் சாலையில் பாய்ந்தோடுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இயக்கப்படும் வாகனங்கள் மிகுந்த

எச்சரிக்கையுடன் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சிறிது தவறினாலும் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். மேலும் சாலை முழுவதும் பரவி கிடக்கும் ஜல்லி கற்கள் கால்களை பதம் பார்ப்பதால் நடந்து செல்வதற்கும் முடியாத அவல நிலை உள்ளதாக கூறிய பொதுமக்கள் கரியமலை பிரிவு முதல் பெரியார்நகர் வரையிலான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

The post பழுதடைந்த கரியமலை பெரியார் நகர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: