கனடாவில் இந்திரா காந்தி படுகொலை காட்சி சித்தரிப்பு ஊர்வலம்: மிகவும் வெட்கக் கேடானது; காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: கனடாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட காட்சி சித்தரிப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மிகவும் வெட்கக்கேடான செயல் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு பேரணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவின் பிராம்ப்டன் நகரில் கடந்த 4ம் தேதி நடந்த ஒரு ஊர்வலத்தில், இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்படுவதை சித்தரிக்கும் விதமான புகைப்படங்களுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. பிராம்ப்டன் நகரின் முக்கிய சாலைகள் வழியே நடந்த இந்த ஊர்வலத்தின் காட்சிகள் சமூகவலை தளங்களில் வௌியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விடியோவை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர் மிலிந்த் தியோரா, “இந்திரா காந்தி படுகொலையை சித்தரித்து கனடாவில் 5 கிமீ தூரம் நடந்த ஊர்வலத்தை பார்த்து ஒரு இந்தியனாக நான் அதிர்ச்சி அடைகிறேன். இதை கண்டிக்கிறேன். இது ஒரு நாட்டின் வரலாறு மீதான மரியாதையை இழிவுப்படுத்தி, கேள்விக்குறியாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த ஊர்வலம் வெட்கக் கேடான செயல். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவிடம் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தன் ட்விட்டர் பதிவில், “கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை கண்டிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கனடாவில் இந்திரா காந்தி படுகொலை காட்சி சித்தரிப்பு ஊர்வலம்: மிகவும் வெட்கக் கேடானது; காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: