ஊட்டி, ஜூன் 7: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்யத் துவங்கும். இந்த மழை சுமார் இரு மாதங்களுக்கு மேல் நீடிக்கும். மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிரும் அதிகரிக்கும். குறிப்பாக, ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை காணப்படும் நிலையில், குளிர் அதிகமாக காணப்படும். அதேபால், எந்நேரமும் மழை பெய்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியது.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வெம்மை ஆடைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையின்றி, வெயில் அடிப்பதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள், அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து செல்கின்றனர். மழை தாமதித்து வரும் நிலையில், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கினால், நீலகிரியில் அதன் தாக்கம் காணப்படும். ஆனால், கேரள மாநிலத்தில் இதுவரை மழை துவங்காத நிலையில், ஊட்டியில் வெயில் வாட்டி வருகிறது.
The post ஜூன் மாதம் துவங்கக்கூடிய தென்மேற்கு பருவமழை தாமதம் appeared first on Dinakaran.