தாமதமாக பூத்துள்ள மேரிகோல்டு மலர்கள்

 

ஊட்டி, ஜூன் 5: ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இம்முறையும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இந்த மலர் செடிகளில் மலர்கள் பூத்துவிடும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். ஆனால், இம்முறை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி துவங்கிய ஒரு மாத காலம் பூங்கா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மலர் செடிகளும் இம்முறை சற்று தாமதமாக நடவு செய்யப்பட்டன. இதனால், போதிய பராமரிப்பு இன்றி பூங்காவில் உள்ள மலர் செடிகளில் பூக்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியின் போது கூட ெபரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்காமல் இருந்தது.

குறிப்பாக, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நட்சத்திர வடிவில் நடவு செய்யப்பட்டிருந்த மேரிகோல்டு மலர் செடிகளில் மலர்கள் பூக்காமல் இருந்தது. சீசன் முடிந்த நிலையில் தற்போது தான் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள பூங்காவில் உள்ள மேரிகோல்டு மலர்கள் மற்றும் பூங்காவின் பிற பகுதிகளிலும் தற்போது தான் மேரிகோல்டு மலர்கள் பூத்துள்ளன. தாமதமாக பூத்த இந்த மலர்களை தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post தாமதமாக பூத்துள்ள மேரிகோல்டு மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: